சீர்மிகு சாகுபடி நுட்பங்கள் | தொகுதி – 5 | தென்னை வளர்ப்பு
பொருளடக்கம்
- பதிப்புரை
- தென்னங்கன்று உற்பத்தி
- தென்னை வகைகள்
- மண்வளமும் உர நிர்வாகமும்
- நடவு முறைகள்
- பாசனமும் வறட்சி நிர்வாகமும்
- தென்னையைத் தாக்கும் பூச்சிகள்
- தென்னையைத் தாக்கும் நோய்கள்
- தென்னையில் ஊடுபயிர்கள்
- மதிப்புக்கூட்டுப் பொருள்கள் தயாரிப்பு
- மண்புழு உரம் தயாரிப்பு
நூலாசிரியர்கள்
முனைவர் க.செ.விஜய் செல்வராஜ், முனைவர் சி.சுதாலட்சுமி, முனைவர் இராஜா.ரமேஷ், முனைவர் அ.பாரதி, முனைவர் வெ.சிவக்குமார்
பதிப்புரை
உலகம் முழுவதும் வளரும் பயிர் தென்னை. அணில் தாண்டாத் தென்னை ஆயிரம் இருந்தால் அரசனாக வாழலாம் என்பது நமது முன்னோரின் அனுபவ மொழி. நெல்லுக்கு நண்டோட, எள்ளுக்கு நரியோட, வாழைக்கு வண்டியோட, தென்னைக்குத் தேரோட இடைவெளி விட வேண்டும் என்பது, ஆயிரம் ஆண்டுகள் முன்பே நம் முன்னோர் கண்டறிந்த தொழில் நுட்பம். இன்றைய அறிவியலுக்கு வழிகாட்டியாக இருப்பவை நம் மூதாதையரின் அனுபவங்கள்.
நீர்வளம் இருக்கும் இடத்தில் தென்னை சிறப்பாக வளரும். தரமான கன்றுகளை நட்டு, முறையான உத்திகளைக் கையாண்டால், விவசாயிகளைச் சுகமாக வாழ வைக்கும் தென்னை. சரியான கன்றுகளை நடவில்லையெனில் பொருள் வீணாவதுடன், காலமும் வீணாகி விடும். அதைப் போல, வளர்ப்பு முறைகளில் கவனம் செலுத்தா விட்டாலும் இழப்பைச் சந்திக்க வேண்டும்.
இன்றைய நிலையில், பல்வேறு பூச்சிகளும் நோய்களும் தென்னையைத் தாக்கி மகசூல் இழப்பை ஏற்படுத்தி வருகின்றன. எனவே, சரியான பாதுகாப்பு முறைகளைத் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். அதனால், தென்னை சாகுபடி குறித்த சரியான உத்திகளை விவசாயிகளுக்குத் தர வேண்டும் என்னும் நோக்கத்தில் இந்நூலை வெளியிடுகிறோம். சீர்மிகு சாகுபடி நுட்பங்கள் வரிசையில், இது பச்சை பூமியின் ஐந்தாவது நூலாகும்.
இந்நூலில், தென்னை வளர்ப்பு முறைகளை, முனைவர் க.செ.விஜய் செல்வராஜ், முனைவர் சி.சுதாலட்சுமி, முனைவர் இராஜா.ரமேஷ், முனைவர் அ.பாரதி, முனைவர் வெ.சிவக்குமார் ஆகியோர் எளிமையாக விளக்கியுள்ளனர். விவசாயிகளின் நலனில் அக்கறையுள்ள அவர்களுக்கு நன்றி கூறுவதுடன், மிகத் தரமான இந்நூலை விவசாயிகள் வாங்கிப் படித்துப் பயனடைய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். நன்றி!
– பசுமை க.முருகேசன், பதிப்பாசிரியர்.
நூலாசிரியர்

தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டையில் பிறந்த முனைவர் க.செ.விஜய் செல்வராஜ், தேனி மாவட்டம், பெரியகுளத்தில் உள்ள தோட்டக்கலைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில், இளநிலைப் பட்டம், மதுரை வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் முதுநிலைப் பட்டம், இஸ்ரேல் ஹீப்ரு பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வை மேற்கொண்டு, கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்டம் மற்றும் இஸ்ரேல் ஹீப்ரு பல்கலைக் கழகத்தில் முதுகலை முனைவர் பட்டயம் பெற்றுள்ளார். இப்போது, வேப்பங்குளம் தென்னை ஆராய்ச்சி நிலையத்தில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார்.

கோவை மாவட்டம், பொள்ளாச்சி வட்டத்தில் உள்ள அங்கலக்குறிச்சியில் பிறந்த முனைவர் சி.சுதாலட்சுமி, கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தில், இளநிலைப் பட்டம், முதுநிலைப் பட்டம், மண்ணியல் மற்றும் வேளாண் வேதியியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார். இவர் இப்போது, கோவை மாவட்டம் ஆழியாரில் உள்ள, தென்னை ஆராய்ச்சி நிலையத்தில் உதவிப் பேராசிரியாகப் பணியாற்றி வருகிறார்.

தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியில் பிறந்த முனைவர் இராஜா.ரமேஷ், கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தில், இளநிலைப் பட்டம், மராட்டிய மாநிலம் அக்கோலாவில் உள்ள டாக்டர் பஞ்சாப்ராவ் தேஷ்முக் கிரிஷி வித்யா பீடத்தில், முதுநிலைப் பட்டம், உத்தரப்பிரதேசம் வாரணாசியில் உள்ள பனாரஸ் இந்துப் பல்கலைக் கழகத்தில், பூச்சியியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார். இவர் இப்போது, திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலத்தில் உள்ள வேளாண்மை அறிவியல் நிலையத்தில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார்.

அரியலூர் மாவட்டம், பாளையப்பாடியில் பிறந்த முனைவர் அ.பாரதி, சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில், இளநிலை, முதுநிலை வேளாண்மைப் பட்டம், ஐதராபாத்தில் உள்ள பன்னாட்டு மத்திய தரைக்கடல் பகுதி பயிர்களுக்கான ஆராய்ச்சி நிலையத்தில் முனைவர் பட்ட ஆய்வை மேற்கொண்டு, கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தில் மரபியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார். இப்போது, பட்டுக்கோட்டை வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்தில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார்.

சேலம் மாவட்டம் இராசிபுரத்தில் பிறந்த முனைவர் வெ.சிவக்குமார், தேனி மாவட்டம், பெரியகுளத்தில் உள்ள தோட்டக்கலைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில், இளநிலைப் பட்டம், கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தில் முதுநிலைப் பட்டம், பழவியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார். இவர், இப்போது கோவை மாவட்டம், ஆழியாரில் உள்ள தென்னை ஆராய்ச்சி நிலையத்தில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார்.


