சீர்மிகு சாகுபடி நுட்பங்கள் | தொகுதி – 3 | காய்கறிப் பயிர்கள்
பொருளடக்கம்
- பதிப்புரை
- தக்காளி
- கத்தரி
- வெண்டை
- மிளகாய்
- சின்ன வெங்காயம்
- பெரிய வெங்காயம்
- சுரை
- பாகல்
- புடல்
- பீர்க்கு
- அவரை
- கொத்தவரை
- வெள்ளரி
- சீமை வெள்ளரி
- பூசணி
- சாம்பல் பூசணி
- தர்ப்பூசணி
- முள்ளங்கி
- பீட்ரூட்
- கேரட்
- முட்டைக்கோசு
- மரவள்ளிக் கிழங்கு
- சர்க்கரைவள்ளிக் கிழங்கு
- வெற்றிலைவள்ளிக் கிழங்கு
- சேனைக் கிழங்கு
- செடி முருங்கை
- கறிவேப்பிலை
- கொத்தமல்லி
- புதினா
- கீரை வகைகள்
- பயிர்களும் பட்டங்களும்
தொகுப்பாசிரியர்கள்
முனைவர் வி.சு.சுகந்தி, முனைவர் க.வைதேகி
பதிப்புரை
பச்சை பூமி தமிழகத்தின் முன்னணி வேளாண்மை இதழ். இதன் மூலம், மாதந்தோறும் விவசாயம் சார்ந்த அறிவியல் மற்றும் அனுபவ உத்திகளை விவசாயிகளுக்கு வழங்கி வருகிறோம். மேலும், விவசாயிகளுக்குத் துணை நிற்கும் கால்நடைகள் வளர்ப்பு மற்றும் மரம் வளர்ப்பு, மழைநீர்ச் சேமிப்பு, நிலத்தடி நீர்ப் பாதுகாப்பு, மண்வளப் பாதுகாப்பு உள்ளிட்ட சூழல் மேம்பாட்டு உத்திகளையும் இந்த இதழில் வெளியிட்டு வருகிறோம்.
இத்துடன் நில்லாமல், வேளாண்மைச் செய்திகளைத் தரமான நூல்களாக வெளியிட வேண்டும் என்பதும் எங்கள் நோக்கம். அந்த வகையில், சீர்மிகு சாகுபடி நுட்பங்கள் வரிசையில் இதுவரை இரண்டு தொகுதிகளை வெளியிட்டுள்ளோம். காய்கறிகள் உற்பத்தியைப் பற்றிய முழுமையான செய்திகள் அடங்கிய, சீர்மிகு சாகுபடி நுட்பங்கள் – தொகுதி 3 என்னும் இந்நூல், பச்சை பூமி வெளியிடும் மூன்றாம் நூலாகும்.
காய்கறிகள் நமக்கு உணவுப் பொருளாக மட்டுமில்லாமல், மருந்தாகவும் செயலாற்றி, நம் உடல் நலத்தைக் காக்கின்றன. இதைப்போல, விவசாயிகளுக்கு நல்ல வருவாயைத் தரும் பொருள்களாகவும் காய்கறிகள் உள்ளன. எனவே, விவசாயிகள், அவரவர் சூழ்நிலைக்கு ஏற்ற காய்கறிகளைப் பயிரிட ஏதுவாக, அனைத்துக் காய்கறிகள் சாகுபடி உத்திகளையும் நூலாகத் தயாரித்துள்ளோம்.
விவசாயிகளுக்கு எளிதில் புரியும் வகையில் இந்நூலை எழுதியுள்ள முனைவர் க.வைதேகி, முனைவர் வி.சு.சுகந்தி ஆகியோருக்கும், பயிர்ப் பாதுகாப்பு உத்திகளை மேலாய்வு செய்து கொடுத்து உதவிய, காட்டுப்பாக்கம் வேளாண்மை அறிவியல் நிலைய உதவிப் பேராசிரியர் முனைவர் காயத்ரி சுப்பையா அவர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். காய்கறிகள் சாகுபடிக்கு வழிகாட்டியாக விளங்கும் இந்நூலை, விவசாயிகள் அனைவரும் வாங்கிப் படித்துப் பயனடைய வேண்டுகிறோம்.
– பசுமை க.முருகேசன், பதிப்பாசிரியர்.
நூலாசிரியர்கள்

முனைவர் வி.சு.சுகந்தி அவர்கள் பிறந்த ஊர் வேலூர். இவரின் பெற்றோர் திரு.வி.சுரேந்திரன், திருமதி சு.விஜயலட்சுமி. காஞ்சிபுரம் சோமசுந்தர கன்யா மேல்நிலைப் பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்த இவர், இளங்கலை வேளாண்மைப் படிப்பை அண்ணாமலைப் பல்கலைக் கழகத்திலும், முதுகலை வேளாண்மை மற்றும் முனைவர் பட்ட ஆய்வை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்திலும் முடித்துள்ளார்.
உதகையில் பல ஆண்டுகள், தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையத்தில் ஆய்வுத் துறையில் பணியாற்றியுள்ள இவர், தற்போது, காருண்யா பல்கலைக் கழகத்தில் துணைப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். விவசாயிகள் பயனடையும் வகையில் பல்வேறு தொழில் நுட்பக் கட்டுரைகளை எழுதி வருகிறார்.

முனைவர் க.வைதேகி அவர்கள் சென்னையைச் சேர்ந்தவர். சிதம்பரம் அண்ணாமலப் பல்கலைக் கழகத்தில் இளங்கலை வேளாண்மைப் படிப்பைப் பயின்ற இவர், அதில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்கிறார். தொடர்ந்து, தோட்டக்கலை முதுகலைப் படிப்பையும், முனைவர் படிப்பையும், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தில் முடித்துள்ளார். முனைவர் படிப்பின் போது இவருக்குப் பல்கலைக் கழக மானியக் குழுவின் விருது கிடைத்துள்ளது.
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தின் கீழ் இயங்கும் தனியார் வேளாண்மைக் கல்லூரி ஒன்றில் தோட்டக்கலை உதவிப் பேராசிரியராகப் பணியாற்றியுள்ள முனைவர் க.வைதேகி, தோட்டக்கலைத் துறையின் பல்வேறு பாடப் பிரிவுகளைக் கற்றுக் கொடுப்பதில் அனுபவம் மிக்கவர். மேலும், ஆய்வுக் கட்டுரைகளையும், தொழில் நுட்பக் கட்டுரைகளையும் நிறைய எழுதியுள்ளார்; எழுதியும் வருகிறார்.


