சீர்மிகு சாகுபடி நுட்பங்கள் | தொகுதி – 2 | மலர்ப் பயிர்கள்
பொருளடக்கம்
- முன்னுரை
- பதிப்புரை
- மல்லிகை
- முல்லை
- ரோசா
- சாதிமல்லி
- கனகாம்பரம்
- சாமந்தி
- நிலச் சம்பங்கி
- அரளி
- செண்டுமல்லி
- மரிக்கொழுந்து
- மருவு
- வீரிய ஒட்டு ரோசா
- ஆந்தூரியம்
- கார்னேசன்
- ஜெர்பரா
- ஆஸ்டர்
- ஆர்க்கிட்ஸ்
- கோல்டன் ராட்
- கிளாடியோலஸ்
தொகுப்பாசிரியர்கள்
முனைவர் வி.சு.சுகந்தி, முனைவர் க.வைதேகி
பதிப்புரை
விவசாயிகளைக் கைவிடாத விளைபொருள்கள் மலர்கள். மனிதனின் பிறப்பு முதல் இறப்பு வரையில் நிகழும் முக்கிய நிகழ்வுகளில் எல்லாம் முந்தியிருக்கும் இந்த மலர்கள். அக்கறையுடன் குறைந்த பரப்பில் சாகுபடி செய்தாலும் போதும்; ஒரு குடும்பத்தின் பொருளாதாரத் தேவையைச் சரிக்கட்டும் அளவுக்குப் பணத்தைக் கொடுத்து விடும். பாசனப் பற்றாக்குறை இருக்கும் இடங்களுக்கும், கொஞ்சம் போல நிலம் உள்ளவர்களுக்கும் ஏற்றது மலர்ப் பயிர்கள் சாகுபடி.
அவரவர் சூழலுக்குத் தக்கபடி மலர்ப் பயிர்களைச் சாகுபடி செய்யலாம். உள்ளூரில் தொடங்கி உலகம் முழுவதும் பூக்களுக்கான சந்தை விரிந்து கிடக்கிறது. அதாவது, உள்ளூரிலும் விற்கலாம்; வெளிநாடுகளிலும் விற்கலாம். பூக்களின் வகைகள் மற்றும் பூக்களின் தரத்துக்குத் தகுந்த விலை கிடைக்கும். அதனால் தான், வாழ்வாதாரம் வேண்டுமே என்பதற்காக ஏழை விவசாயிகளும், வளங்கொழிக்க வேண்டும் என்பதற்காக வசதி படைத்தவர்களும் மலர்கள் உற்பத்தியில் ஆர்வமுடன் ஈடுபட்டு வருகிறார்கள்.
இப்போது நிலவும் வறட்சியான சூழலில் சிறு குறு விவசாயிகளைக் காப்பது மலர்ப் பயிர்கள் சாகுபடி. அதனால், மலர்கள் உற்பத்திக் குறித்த தொழில் நுட்பங்களை, அவர்கள் எளிதில் அறிந்து பயனடைய வேண்டும் என்னும் நோக்கத்தில் இந்த நூல் வெளியிடப்படுகிறது.
எல்லாப் பயிர்களுக்குமான சாகுபடி நுட்பங்களை விவசாயிகளுக்குத் தெளிவாகச் சொல்ல வேண்டும் என்பது எங்களின் நோக்கம். அந்த வகையில், விவசாயிகளுக்குத் தேவையான தொழில் நுட்பங்களை நூல்களாகத் தயாரித்துத் தொடர்ந்து வெளியிட உள்ளோம். தொடக்கமாக, சிறு குறு விவசாயிகளுக்கும், பெரு விவசாயிகளுக்கும் பயன்படும் வகையில், மலர்கள் உற்பத்தி நுட்பங்கள் என்னும் இந்நூலை வெளியிடுகிறோம்.
இந்த நூலை, கோவைக் காருண்யா பல்கலைக் கழக மண்ணியல் மற்றும் வேளாண் வேதியியல் துறையின் துணைப் பேராசிரியர் முனைவர் வி.சு.சுகந்தி அவர்களும், முனைவர் க.வைதேகி அவர்களும் எழுதியுள்ளனர். மலர்கள் உற்பத்தியைப் பற்றிய தொழில் நுட்பங்களை விவசாயிகள் புரிந்து கொள்ளும் வகையில், மிக எளிமையாகச் சொல்லியுள்ளனர். அவர்களுக்கும், பயிர்ப் பாதுகாப்புத் தொழில் நுட்பங்களை மேலாய்வு செய்து கொடுத்த, காஞ்சிபுரம் மாவட்டம், காட்டுப்பாக்கம் வேளாண்மை அறிவியல் நிலைய உதவிப் பேராசிரியை முனைவர் காயத்ரி சுப்பையா அவர்களுக்கும், மேலும், இந்த நூல் சிறப்பாக வெளியாக உதவிய அத்தனை பேருக்கும் பச்சை பூமியின் சார்பில் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
– பசுமை க.முருகேசன், பதிப்பாசிரியர்.
நூலாசிரியர்கள்

முனைவர் வி.சு.சுகந்தி அவர்கள் பிறந்த ஊர் வேலூர். இவரின் பெற்றோர் திரு.வி.சுரேந்திரன், திருமதி சு.விஜயலட்சுமி. காஞ்சிபுரம் சோமசுந்தர கன்யா மேல்நிலைப் பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்த இவர், இளங்கலை வேளாண்மைப் படிப்பை அண்ணாமலைப் பல்கலைக் கழகத்திலும், முதுகலை வேளாண்மை மற்றும் முனைவர் பட்ட ஆய்வை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்திலும் முடித்துள்ளார்.
உதகையில் பல ஆண்டுகள், தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையத்தில் ஆய்வுத் துறையில் பணியாற்றியுள்ள இவர், தற்போது, காருண்யா பல்கலைக் கழகத்தில் துணைப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். விவசாயிகள் பயனடையும் வகையில் பல்வேறு தொழில் நுட்பக் கட்டுரைகளை எழுதி வருகிறார்.

முனைவர் க.வைதேகி அவர்கள் சென்னையைச் சேர்ந்தவர். சிதம்பரம் அண்ணாமலப் பல்கலைக் கழகத்தில் இளங்கலை வேளாண்மைப் படிப்பைப் பயின்ற இவர், அதில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்கிறார். தொடர்ந்து, தோட்டக்கலை முதுகலைப் படிப்பையும், முனைவர் படிப்பையும், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தில் முடித்துள்ளார். முனைவர் படிப்பின் போது இவருக்குப் பல்கலைக் கழக மானியக் குழுவின் விருது கிடைத்துள்ளது.
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தின் கீழ் இயங்கும் தனியார் வேளாண்மைக் கல்லூரி ஒன்றில் தோட்டக்கலை உதவிப் பேராசிரியராகப் பணியாற்றியுள்ள முனைவர் க.வைதேகி, தோட்டக்கலைத் துறையின் பல்வேறு பாடப் பிரிவுகளைக் கற்றுக் கொடுப்பதில் அனுபவம் மிக்கவர். மேலும், ஆய்வுக் கட்டுரைகளையும், தொழில் நுட்பக் கட்டுரைகளையும் நிறைய எழுதியுள்ளார்; எழுதியும் வருகிறார்.


